யாழில் கடற்றொழிலாளர்கள் மாயம்: புறந்தள்ளப்படும் தேடுதல் நடவடிக்கை - உறவினர்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தங்கராசா அமல்ராஜ் (வயது 44) மற்றும் செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு கடற்றொழிலாளர்களுமே இவ்வாறு காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அந்த கடற்றொழிலாளர்களின் உறவுகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், “அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும் இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை.

அவர்கள் இருவரையும் நேற்றைய தினம் (03) இந்தியக் கடற்றொழிலாளர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்ததாகவும் கூறினர்.
இந்திய எல்லையில் நின்றால் இந்தியக் கடற்படையினர் கைது செய்துவிடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாகச் செல்வதாகவும் அவர்கள் தங்களுக்குக் கூறிவிட்டுச் சென்றதாக இந்தியக் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
உலங்குவானூர்தி
இது குறித்து நாங்கள் கடற்படையினர், காவல்துறையினர் என அனைவருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல்போன நிலையில் அவரை உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.

அதுபோல இவர்களையும் ஏன் காப்பாற்றக் கூடாது ? இதுவரை கடற்படை எந்தவொரு தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இதுவரை 3,500 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தி நாங்களே தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டோம்.
எல்லை தாண்டிச் சென்று தேடவும் முடியாது, நாங்கள் தேடிச் சென்றவேளை இந்தியக் கடற்படையினர் எங்களை விரட்டினர்.
எனவே அவர்களை உயிருடன் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


