மட்டக்களப்பில் கைதான போலி சிஐடிக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பில் இருவரிடம் தான் விசேட குற்ற விசாரணை பிரிவு அதிகாரி என கூறி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது நேற்றையதினம்(8) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இராணுவ புலனாய்வு பிரிவு
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த நிலையில் அந்த வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செயற்பட்டு வந்தவர் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கி தான் விசேட குற்ற விசாரணைப் பிரிவு சிஐடி , எனவே குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று வருவதாகவும் உடன் இந்த பணத்தை வாங்கி தர முடியும் அதற்கு பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலியான சிஐடி யிடம் ஒருவர் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றவர் 3 ஆயிரம் ரூபாய் உட்பட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த இருவரும் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (7) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
