தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் பேசுவது வெட்ககேடான செயல் : நாமல் ராஜபக்ச சாடல்
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் கருத்து வெளியிடுவது வெட்கக்கேடான செயல். இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையும், நீதிபதிகளின் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமையும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச
களுத்துறை - ஹொரணையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் நிதி அமைச்சின் செயலாளரின் நடவடிக்கைகளால் 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை காணாமல் போயுள்ள நிலையில், அதுகுறித்து அரசாங்கம் எந்தவித அக்கறையும் காட்டாமல் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் இதுகுறித்து கவலையின்றி செயல்படுகின்றது.
நிலக்கரி கொள்வனவு பிரச்சினை
டொலரின் பெறுமதி தற்போது அதிகரித்துள்ளதால், ஏற்பட்டிருக்கும் இழப்பு மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.

நிலக்கரி கொள்வனவு பிரச்சினை, தனியார் வங்கியில் 13 பில்லியன் ரூபா மாயமான சம்பவம், அஞ்சல் திணைக்களம் மற்றும் துறைமுகத்தில் கொள்கலன்கள் காணாமல் போன விவகாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஹேக்கர்களே காரணம் என அரசு விளக்கம் அளிக்கின்றது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் கருத்து வெளியிடுவது வெட்கக்கேடான செயல். இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையும், நீதிபதிகளின் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமையும்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீதியமைச்சர் உரிய ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும்.
உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது
மணிக்கு 1000 கிலோமீற்றர் வேகத்தில் நாட்டை முன்னேற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தொடருந்தின் வேகத்தை 20 கிலோமீற்றராகக் குறைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்குப் பிறகு தொடருந்துத் துறையில் எந்தவொரு திட்டமிட்ட நவீனமயமாக்கலும் இடம்பெறவில்லை.
மேலும், ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் ஒடுக்குவதன் மூலம் உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது 1988–1989 காலகட்டம் அல்ல என்பதையும், இன்றைய சூழலில் எதையும் மறைக்க முடியாது என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். அதன் சுமையை இறுதியில் நாட்டு மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |