கடந்த கால அரசாங்கங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தமிழ் எம்.பி ஆதங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சி காலம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையில் இந்த நாட்டிலே 45 ஊடகவியலாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டமைக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள்.
அதில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சுமார் 14 ஊடகவியலாளர்களும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசவின் ஆட்சிக் காலங்களிலும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
மோசமான கருத்து
இந்தநிலையில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நாங்கள் எடுத்து பார்க்கின்ற போது சில மட்டுபாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் வேண்டும்.
சில விமர்சனங்களை பார்க்கின்ற போது நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவையாகவும் இருக்கின்றன, சிலர் வெளியிடுகின்ற கருத்துக்களுக்கும் உண்மை தன்மைக்கும் எந்தவித தொடர்புகளும் இருக்கமாட்டாது.
அந்த சந்தர்ப்பத்தில் நாம் பார்க்கின்றோம் இந்த சமூக ஊடகங்கள் மிகவும் மோசமான கருத்துக்களை பரப்புகின்றன என்பது பற்றி நாம் யோசிக்கின்றோம்.
காப்புச் சட்டம்
தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்களுக்கு துதி பாடுகின்ற ஊடகங்களாக சிலர் ஊடகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.
அறிவியல் ரீதியாக மற்றும் முற்போக்கு ரீதியான செயல்படுகின்ற ஊடகங்கள்தான் தற்காலத்தில் அவசியமாக காணப்படுகின்றன.
அந்த அடிப்படையில்தான் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது மதி நுட்பமாக செயல்படுகின்ற பிள்ளைகளை தட்டி கேட்கின்ற மற்றும் சுட்டிக் காட்டுகின்ற நிலையில் அந்த ஊடகங்கள் செயல்படுகின்ற போது அவற்றின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதும், மட்டுப்படுத்துவதும் மற்றும் அந்த ஊடகங்களை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
