விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட முழங்காவிலில் புதிய முயற்சி - கிடைக்குமா ஆதரவு?
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முழங்காவில் பிரதேசத்தில் உற்பத்திச்சாலை ஒன்று முழங்காவில் விநாயகர் விவசாய கூட்டுறவு சங்கத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்திச்சாலையில் பூசணிக்காய் வத்தல் பதனிடுதல்,மரவள்ளி பதனிடுதல் மற்றும் பவுடர் ஆக்குதல், வாழைக்காய் பவுடர் ஆக்குதல் எனப் பல்வேறு உற்பத்திகளும் இடம்பெற்று வருகிறது.
நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளால் வாழைச்செய்கை, பூசணி, பப்பாசி, மரவள்ளி ஆகிய பயிர்ச் செய்கைகள் செய்து அதனை விவசாயிகளினால் சந்தைப்படுத்த முடியாத நிலைகளின் நலன் கருதி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து குறைந்த விலையில் கிடைக்கின்ற பொருட்களை வைத்து வத்தல், பவுடராக்கி ஏற்றுமதி செய்கின்ற முயற்சியில் ஈடுபடுவதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளுர் சந்தைப்படுத்தலையும் பார்க்க வெளிநாடுகளிற்கு சந்தைப்படுத்துவதன் மூலம் தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் மற்றும் உற்பத்திச்சாலையும் மேம்படக்கூடிய சூழல் உருவாகும் என விநாயகர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான உற்பத்திகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் யாராவது ஈடுபட்டால் தம்மை தொடர்புகொண்டு பூசணி வத்தல், மரவள்ளி மா, கதலி வாழைக்காய் பவுடர் மற்றும் வத்தல், பப்பாசி பவுடர் ஆகிய பொருட்கள் செய்து கொடுக்க கூடிய சூழல் உள்ளது எனவும் தேவையானவர்கள் முழங்காவில் விநாயகர் சங்கத்தினூடாக தொடர்புகொண்டு அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.