முள்ளிவாய்க்கால் 17 வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் ஈழத்தமிழினம் விடுதலையை சாத்தியமாக்கும் புதிய பூகோள அரசியல் மூலோபாயம்!
2009 மே 18 அன்று முள்ளிவாய்க்கால் என்னும் மிகக் குறுகிய நிலப்பரப்பில் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு கட்டாய ஓய்விற்குட்பட்ட போது அது உலகத்தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது மட்டுமல்ல நமது அரசியல் நகர்வுகளையும் முற்றுமுழுவதுமாக திசைமாற்றியது. இன்று அந்தப் பேரவலம் நிகழ்ந்து 17 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் வெறும் அழுகையினூடாகவும் உணர்ச்சிகரமான மேடைப்பேச்சாலும் மட்டும் ஒரு தேசிய இனம் தன் விடுதலையை வென்றெடுத்துவிட முடியாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
புகழ்பெற்ற இராணுவ மூலோபாயவாதி கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் குறிப்பிடுவது போல அரசியல் நோக்கத்தின் தொடர்ச்சியே போராகும். போர் முடிவுக்கு வரும்போது அரசியல் இன்னும் தீவிரமடைகிறது. ஆகவேதான் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்திருக்கலாம் ஆனால் அதற்கான அரசியல் காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
கடந்த இந்த 17 ஆண்டுக்கால இடைவெளியில், உலகளாவிய பூகோள அரசியல் முற்றிலும் புதியதொரு பரிமாணத்திற்குள் நகர்ந்துள்ள சூழலில் உணர்ச்சி அரசியலைக் கடந்து அறிவுசார்ந்த ஒரு புதிய மூலோபாயத்தின் மூலம் ஈழத்தமிழினம் தனது விடுதலையை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை ஆராய்வதே இந்த நினைவு நாளின் உண்மையான தேவையாகும்.
🛑 சர்வதேச ஏமாற்றங்களும் நாம் பெற்ற பட்டறிவும்
உண்மையில் இங்கு நாம் மிக முக்கியமாகக் கேள்வி எழுப்ப வேண்டிய ஒரு புள்ளி, முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான இந்த நீண்ட இடைவெளியில் ஈழத்தமிழினம் போதிய பட்டறிவை அடையவில்லையா என்பதுதான். கடந்த 17 ஆண்டுகளில் சர்வதேச சமூகம் நமக்குத் தொடர் ஏமாற்றங்களையே தந்துள்ளது. அதாவது ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை மட்டும் நம்பி காலத்தைக் கடத்திய நமது எதிர்வினை அரசியல் நமக்கு எந்தவொரு காத்திரமான தீர்வையும் பெற்றுத்தரவில்லை என்பதுதான் நாம் பெற்ற ஆகப்பெரும் பட்டறிவாகும்.
இந்த உலகின் வல்லரசு நாடுகள் தங்களின் சொந்தப் புவிசார் அரசியல் நலன்களுக்காக மட்டுமே மனித உரிமைகளைப் பேசுகின்றனவே அன்றி ஒடுக்கப்பட்ட இனங்களின் தார்மீக விடுதலைக்காக அல்ல என்பதை உக்ரைன் முதல் காசா வரையிலான தற்கால உலக அரசியல் நமக்குத் தெட்டத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது.
எனவே இனியும் சர்வதேச சமூகத்தின் மீதோ அல்லது தென்னிலங்கை ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் மீதோ கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் கடந்த காலப் பின்னடைவுகளைக் கற்றுக்கொண்ட பாடமாகக்கொண்டு நமது பலவீனங்களை பலமாக மாற்றும் நமக்கான தனித்துவமுடைய ராஜதந்திரத்தை நோக்கி நாம் நகர வேண்டிய தருணம் இதுவேயாகும்.
🛑 மென் அதிகாரமும் ராஜதந்திர ஒருங்கிணைப்பும்
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இராணுவ பலம் இல்லாத தற்காலச் சூழலில் அரசற்ற ஒரு தேசிய இனம் சர்வதேச அரங்கில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவும் தன் இலக்கை அடையவும் மென் அதிகாரம் என்னும் ராஜதந்திர தத்துவத்தைக் கையாள்வது கட்டாயமானதாகும்.
ஈழத்தமிழர்கள் இன்று தமது தாயக நிலப்பரப்பைக் கடந்து உலகம் முழுவதும் பரவி உலகின் முக்கியமான பல நாடுகளின் குடியுரிமைகளுடனும் வலுவான பொருளாதாரச் செல்வாக்குடனும் வாழ்வதே நமது ஆகப்பெரும் பலமாகும். அதாவது உலக நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள், சர்வதேச சட்ட வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழில்முனைவோரின் ஆற்றல் தனித்தனியாக சிதறிக்கிடக்காமல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
அதேவேளையில் தமிழர் தாயகத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தங்களுக்குள் இருக்கும் தத்துவார்த்த முரண்பாடுகளைக் கடந்து சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் ஒற்றை நிகழ்ச்சி நிரலின் கீழ் இணைவதே காலத்தின் கட்டாயமுமாகும்.
🛑 இந்தோ-பசிபிக் பிராந்தியமும் வல்லரசுகளின் போட்டியும்
சமகாலச்சூழலில் இலங்கைத் தீவு அமைந்திருக்கும் புவிசார் இருப்பிடமானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச வல்லரசுகளுக்கு ஒரு முக்கிய வேட்டைக்காடாக மாறியுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று முக்கோண சக்திகளின் அதிகாரப் போட்டிக்கு நடுவேதான் தமிழர்களின் மரபுவழி தாயக நிலப்பரப்பு சிக்கியுள்ளது. இதனை நமக்குச் சாதகமான ஒரு நெம்புகோலாக மாற்றுவதே இப்போதைக்கு ராஜதந்திரமாய் இருக்க வேண்டும்.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை இலங்கையின் ஒற்றையாட்சி அரசை விட வடக்கு-கிழக்கில் பலமான தன்னாட்சி கொண்ட தமிழர்களின் இருப்பே நிரந்தரப் பாதுகாப்பு என்பதை நாம் புதுடெல்லிக்கு உணர்த்த வேண்டும். அதேநேரம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடம் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை முன்வைத்து இந்து சமுத்திரத்தில் தங்களின் நம்பகமான, ஜனநாயகம் பேசும் ஒரே பங்காளி தமிழர்கள் மட்டுமே என்பதை அவர்களின் மனங்களில் நாம் நிலைநிறுத்த வேண்டும்.
சீன-சிங்களக் கூட்டு வடக்கு கிழக்கில் தமிழர்களின் நில ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்துவதால் அதற்கு மாற்றான சர்வதேசப் பாதுகாப்புக் கூட்டணியோடு நமது நலன்களைப் பிணைப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனமான நகர்வாகும்.
🛑 உள்நாட்டுப் பலமும் பொருளாதாரச் சுயாட்சியும்
அதேபோல விடுதலை என்பது வெறும் வெளியுறவு ராஜதந்திரத்தால் அல்லது வெளிநாடுகள் தரும் அழுத்தத்தால் மட்டுமே சாத்தியமாவதில்லை. அதாவது அது உள்ளிருந்து வளர வேண்டும். தத்துவஞானி பிரான்ஸ் ஃபனான் குறிப்பிடுவது போல ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது அவர்களின் உளவியல் மற்றும் பொருளாதாரத் தற்சார்பில் இருந்தே தொடங்குகிறது. ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் தாயகத்தில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் பௌத்தமயமாக்கலும் சனத்தொகை பரம்பல் சிதைப்பும் அரங்கேற்றப்படும் சூழலில் மண்ணைப் பாதுகாக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பொருளாதாரச் சுயாட்சி மிக அவசியமாகும்.
புலம்பெயர் தமிழர்களின் நிதிமூலமானது வெறும் உதவிசெய்யும் தொண்டு நிறுவனக் கட்டமைப்பாக மட்டுமில்லாமல் தாயகத்தில் நிலையான வேலைவாய்ப்புகளையும் உற்பத்தித் துறையையும் உருவாக்கும் இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா போன்ற முதலீடுகளாக மாற வேண்டும்.
அதேநேரம் வடக்கு-கிழக்கு பிராந்தியத்தைத் தொழில்நுட்ப ரீதியாகவும் நவீன கூட்டுறவுப் பொருளாதார மாதிரிகள் மூலமும் தற்சார்பு கொண்ட ஒரு மண்டலமாக மாற்றியமைப்பதன் மூலமாகவே ஒரு சமூகம் தனது அரசியல் உரிமைகளுக்காக நீண்டகாலம் நிமிர்ந்து நின்று போராட முடியும்.
🛑 அறிவார்ந்த அரசியலை நோக்கி நகர்வோம்
உண்மையில் 17 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் நீண்ட காலம் போல் தோன்றலாம் ஆனால் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அது ஒரு சிறிய இடைவெளி மட்டுமே. உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து விலகி கடந்த காலப் பின்னடைவுகளில் இருந்து பெற்ற பட்டறிவைக் கொண்டு மிகத் தெளிவான திட்டமிடப்பட்ட பூகோள அரசியலைக் கையாள்வதே முள்ளிவாய்க்காலில் நாம்பட்ட வேதனைகள் நமக்குக் கற்றுத்தந்த இறுதிப் பாடமாகும்.
தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் ஆகிய முக்கோணச் சக்திகளின் கூட்டுப் பணியும் வல்லரசுகளின் புவிசார் அரசியல் தேவைகளோடு தமிழர்களின் அரசியல் உரிமைகளைச் சாதகமாகப் பிணைப்பதும் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத் தற்சார்பு மூலம் மென் அதிகாரப் போரை முன்னெடுப்பதுமே எதிர்கால விடுதலைக்கான மூன்று மிக முக்கிய தூண்களாகும்.
முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட தியாகப்புதல்வர்களின் இரத்தம் வீணாகப்போகக் கூடாது என்றால் நாம் அறிவுசார் ஆயுதங்களை ஏந்த வேண்டிய தருணம் இதுவேயாகும். முள்ளிவாய்க்காலின் இந்தப் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொண்டு ஈழத்தமிழினத்தின் அரசியல் விடுதலையையும் இறையாண்மையையும் நோக்கிய பயணத்தை இன்னும் உறுதியுடன் தொடர்வோம். அதுவே ஒருபெருங்கனவுடன் தியாகமான ஆன்மாக்களுக்கு நமது நன்றிக்கடனாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |