தமிழர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நினைவேந்தல் ஆரம்பம்
புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (12) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பள்ளிமுனை பெருக்கமரத்தடி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு, அங்கு கலந்து கொண்டவர்களுக்கும் வீதியால் பயணித்த பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


🛑 செய்திகள் - Nayan Nayan
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் மக்களின் உயிர்களை காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சி பலருக்கும் உயிர் தாங்கிய உணவாக இருந்தது.
அந்த வரலாற்று உண்மைகளை உலகறியச் செய்யும் நோக்கில் தமிழினப் படுகொலை வாரத்தின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கனகபுரம் நகர் வீதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவுகளை இழந்த குடும்பத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

🛑 செய்திகள் - Siva Siva
முதலாம் இணைப்பு
2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், தமிழினத்தின் வலிகளையும் தியாகத்தையும் பறைசாற்றும் 17-ஆம் ஆண்டு நினைவேந்தல் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபியில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் இன்று (12.05.2026) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்த காலத்தில் உயிர் பிழைப்பதற்காக மக்கள் அருந்திய உப்பில்லா கஞ்சியை நினைவூட்டும் முகமாக வடக்கு–கிழக்கு தாயகப் பகுதிகளில் மே 12 முதல் மே 18 வரை உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சப்பட்டதுடன், சத்துருக்கொண்டான் படுகொலை மற்றும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி அங்குள்ள பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் 2026 மே 12ஆம் திகதி முதல் மே 18ஆம் திகதி வரை வடக்கு–கிழக்கு தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளின் விபரம் வருமாறு:
12.05.2026 - கொக்குவில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபி
13.05.2026 - கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு படுகொலை நினைவுத் தூபி
14.05.2026 - வந்தாறுமூலை உழவர் சந்தி
15.05.2026 - கிரான் சந்தி
16.05.2026 - புல்லுமலை
16.05.2026 - தாண்டியடி, வவுணதீவு
17.05.2026 - புதுக்குடிருப்புப் படுகொலை நினைவுத் தூபி
18.05.2026 - குடும்பிமலை போன்ற இடங்களிலும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை. தினேஸ், மாநகரசபை உறுப்பினர்களான கருணாகரன், ஜனகன், சண்முகலிங்கம் உள்ளிட்டோர் மற்றும் தாயக செயலணி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |