முஸ்லிம்களுக்கு தனிச்சட்டம் இல்லை! அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு
காதி நீதிமன்ற முறைமை ஆகியவற்றை நீக்கினால் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் சர்ச்சைகள் ஏற்படலாமென நேற்றுமுன்தினம் அமைச்சரவையில் நீதி அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதியமைச்சரின் இந்த கோரிக்கைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இஸ்லாமியர்களுக்கென தனிச்சட்டம் இலங்கையில் இல்லையென்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
முகத்தை மூடி ஆடை அணிவதை தடை செய்வது குறித்து பிரான்ஸில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள். அதற்கு அதிகபட்ச ஆதரவு கிடைத்தது. இங்கேயும் ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அந்த சட்டங்களில் சீர்திருத்தம் செய்யாமல் இருக்க முடியாது என தெரிவித்தார்.
பலதார திருமணங்களை அனுமதிக்கவே முடியாது. இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் பொதுவான சட்டத்தை பின்பற்ற வேண்டும். பல தரப்புகளுக்காக பல சட்டங்கள் இருக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சரவையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சிபாரிசுகள் கிடைத்த பின்னர் தேவையான திருத்தங்களை செய்யலாமென அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில இங்கு தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் கலை, கலாசாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டதிருத்தங்களை செய்வதில் தவறில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளையடுத்து கருத்து வெளியிட்ட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச , ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சிபாரிசுகள் கிடைத்த பின்னர் இதில் திருத்தங்களை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
