வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது அந்நாட்டு காவல்துறை கொலைவெறித் தாக்குதல்
வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன், அந்நாட்டு காவல்துறை அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு (12) சட்டோகிராமில் நயீம் ஹசன் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு போட்டியில் பங்கேற்றுவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நயீமை, சட்டோகிராமின் லல்கான் பஜார் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
காவல் நிலையத்தில் கொலைவெறித்தாக்குதல்
பின்னர் அவர் வலுக்கட்டாயமாக மற்றொரு முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றியிருந்த மக்களும் நயீமும் அவர் ஒரு தேசிய கிரிக்கெட் வீரர் என்று கூறியபோதிலும், காவல்துறை அதிகாரிகள் அவர்களைப் புறக்கணித்து அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் தடிகளாலும் பிளாஸ்டிக் குழாய்களாலும் தன்னை ஈவிரக்கமின்றி அடித்ததாக நயீம் கூறுகிறார். இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தில் நியாயமான விசாரணையும் நீதியும் வேண்டும் என்று நயீம் மேலும் கூறியுள்ளார்.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டோகிராம் பெருநகர காவல் துணை ஆணையர் அமிருல் இஸ்லாம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

காவல்துறை காவலில் இருந்த நயீம்,இன்று சனிக்கிழமை காலை விடுதலையாகி வீடு திரும்பினார். அவருக்கு நேர்ந்த இந்த மனிதாபிமானமற்ற மற்றும் அநியாயமான செயலுக்கு, பல முக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |