பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முயற்சிக்கும் JVP - அம்பலப்படுத்தும் கம்மன்பில
பிரதமர் ஹரிணி அமரசூரியவை (Harini Amarasuriya) நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு தரப்பினர் தற்போது செயற்படுகின்றனர் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (11) நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும்.
பிரதமரை மலினப்படுத்திய அமைச்சர்
இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார்.
பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளதை கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளார்.
ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது.
தெளிவாக குறிப்பிட்ட ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும், அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார்.
அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்து பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
