வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரச தரப்பின் அறிவிப்பு
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என நிஹால் அபேசிங்கதெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், "நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இதில் ஒரு தார்மீகப் பிரச்சினை இருப்பதை நாங்கள் அறிவோம். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என அவர் தெரிவித்தார்.
நிலக்கரி கொள்வனவு
குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையில் இரண்டு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் போதிய அளவில் கொள்வனவு செய்யத் தவறியதன் மூலம், அமைச்சர் தனது முதன்மைப் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது ஒரு தேசிய எரிசக்தி சொத்தை நிர்வகிப்பதில் காட்டப்பட்ட பயங்கரமான அலட்சியம் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
அத்துடன் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை வரும் ஏப்ரல் 10ஆம் திகதி காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நாடாளுமன்றத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்