நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை கையகப்படுத்தவுள்ள அரசாங்கம் : மக்களுக்கு மாற்று நிலம்
அண்மைய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் இடம்பெயர்ந்தவர்கள், சேதமடைந்த குடியிருப்புகள் அல்லது அந்த நிலங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்றும், நிலங்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுனாமிக்கு பின்னர் அரசாங்கம் விட்ட பாரிய தவறு
நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் வசிப்பதைத் தடுக்க தொடர்புடைய நிலச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்று சந்திரகீர்த்தி குறிப்பிட்டார்.

"சுனாமிக்குப் பிறகு,அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிலத்தை வழங்கியது, ஆனால் கடல் அரிப்பு அல்லது சுனாமியால் ஆபத்தில் உள்ள பகுதி நிலங்களை கையகப்படுத்தவில்லை. இதன் விளைவாக, இடம்பெயர்ந்தவர்கள் புதிய நிலத்தைத் தக்க வைத்துக் கொண்டு தங்கள் பழைய நிலங்களுக்குத் திரும்பினர்," என்று அவர் கூறினார்.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும்
அத்தகைய சூழ்நிலையைத் தடுக்க, நிலச்சரிவு ஏற்படக்கூடிய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேரிடருக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு முதலில் செய்யப்படும் என்றும், அதன் பிறகு சூறாவளியால் ஏற்பட்ட சேதம் குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் என்றும் சந்திரகீர்த்தி கூறினார்.
நிதி அமைச்சகத்தின் தேசிய திட்டமிடல் பிரிவால் செய்யப்படும் இந்த மதிப்பீடு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |