2055 ஆம் ஆண்டிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இரண்டாவது ஓடுதளம்!
சர்வதேச முதன்மைத் திட்டத்தின் (Master Plan) பரிந்துரைகளின்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறைந்தது 2055ஆம் ஆண்டு வரை இரண்டாவது ஓடுதளம் அமைக்கப்பட மாட்டாது என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
புதிய ஓடுதளத்தை அமைப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள ஓடுதளத்திலேயே சில திருத்தங்கள் மற்றும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விமான நிலையத்திற்கான இறுதி முதன்மைத் திட்டப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதோடு, இதற்காக சர்வதேச தரப்பு ஒன்று இலங்கையினால் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வான்வெளி முடங்கும் அபாயம்
குறைந்தது 2055 வரை இரண்டாவது ஓடுதளம் தேவையில்லை என அந்த சர்வதேச தரப்பே பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே இரண்டாவது ஓடுதளத்தை அமைப்பதற்கான திட்டங்கள் இருந்தபோதிலும், அது செயல்படுத்தப்படவில்லை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள ஒரேயொரு ஓடுதளத்தை மட்டுமே நம்பியிருப்பதால், விமான நிலையம் கடுமையான செயல்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
அவசர கால தரை இறக்கங்கள், பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் போது, ஒட்டுமொத்த வான்வெளியும் முடங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்பட்டுள்ள பெரும் சவால்
இதன்படி, ஏர்பஸ் ஏ380 (Airbus A380) போன்ற உலகின் மிகப்பெரிய வணிக ரீதியான விமானங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 4,000 மீற்றர் நீளமுடைய இரண்டாவது இணை ஓடுதளத்தை அமைப்பது நீண்டகால திட்டமாக இருந்தபோதிலும், அதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளதா பிரிதி அமைச்சர் கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லண்டனின் கேட்விக் விமான நிலையம் 2025ஆம் ஆண்டில் 263,049 வான் போக்குவரத்து நகர்வுகளை ஒற்றை ஓடுதளத்தின் மூலமே கையாண்டுள்ளது என்பதை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தெமிய அபேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிவேக வெளியேற்ற டாக்சிவேகள் (High-speed exit taxiways) இல்லாததால், விமானங்கள் முனையங்களுக்குள் திரும்புவதற்கு ஓடுதளத்திலேயே முழுமையாக வேகத்தைக் குறைக்க வேண்டியுள்ளதாகவும் இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், புதிய ஓடுதளத்தை அமைப்பதை விட, தற்போதுள்ள ஓடுதளத்தை மேம்படுத்துவதற்கே மிகக் குறைந்த செலவாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |