கிளிநொச்சியில் இ.போ.ச. சாரதியுடன் மோதிய தனியார் சாரதி...! எடுக்கப்பட்ட நடவடிக்கை
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி ஒருவருக்கு இரண்டு நாள்கள் பணி இடைநிறுத்தம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துரித நடவடிக்கை
விசுவமடுவிலிருந்து வவுனியா நோக்கிப் பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதியே இவ்வாறு முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அதிகார சபையால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பேருந்தின் சாரதியாகக் கடமையாற்றியவர் முரண்பாட்டில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முறைகேடுகள்
இதனையடுத்து குறித்த சாரதிக்கு இரு தினங்கள் சேவையில் ஈடுபடுவதற்குப் பணி இடைநிறுத்தம் வழங்கி அதிகார சபையின் தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்தின் உரிமையாளருக்கு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் வழித்தட அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் இவ்வாறான பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமுமின்றி முறைப்பாடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |