தமிழர் தாயகத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் வரலாற்று தெளிவூட்டல் நிகழ்வு
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் பங்கேற்குமாறும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பொது மக்கள், குடிசார் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள், கல்வி மான்கள், பாதிக்கப்பட்ட மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாள் செயல்முனை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.
இதன் போது, வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும்” எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராவது ஆண்டு எதிர்வரும் 8 ஆம் திகதி பூர்த்தியாகவுள்ள நிலையில், அன்றைய தினம் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் எனும் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.
இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு தழிழ் மக்கள் கடந்த 1505 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல வகையான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டு வருவதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கள பேரினவாதம்
இந்த நிலையில், சிங்கள பேரினவாதத்தின் இனவாத அடக்கு முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டிய போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.
அத்துடன், அரசியல் தீர்வு தொடர்பான ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்ததைகளையும் தமிழ் தலைவர்கள் காலனித்துவக் காலங்களிலும் அதற்கு பின்னராக இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசின் தலைவர்களுடனும் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக செல்வா பண்டா ஒப்பந்தம், செல்வா டட்லி ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், திம்பு பிரகடனம் மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தை என்பனவற்றை இங்கு குறிப்பிட முடியும்.
எனினும், மேற்படி அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும் சிங்கள தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்ட வரலாறுகளே அதிகம்.
சிங்கள அரசுகள்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனவாத அடிப்படையிலான அரசியல், மொழி, பொருளாதார, சமூக ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாக வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் மற்றும் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், 2006 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.
குறிப்பாக 1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலமான 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

போர்க்குற்றங்கள்
இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை தமிழ் மக்கள் அனுபவிக்க நேரிட்டதுடன், அவர்களது இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் முற்றாக அழிக்கப்பட்டன.
அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இராணுவ மயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்று வரையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு
இந்த நிலையில், இன அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகி இருக்கும் வடக்கு கிழக்கு மக்கள் தனியான தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழக் கூடிய வகையிலான “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்ததுடன் வாழ முடியும்.