வடக்கு ஆளுநர் - பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் சந்திப்பு!
பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், வடக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் சமூகப் பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சந்திக்க தான் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் அமைச்சர் தாரிக் அஹமட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
Insightful discussion with Governor Jeevan Thiagarajah on plans for the Northern province, his priorities and the need for justice and accountability. pic.twitter.com/UiELqhjk6b
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) January 19, 2022
மேலும், பிரித்தானியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையில் சுகாதார சேவைகள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான சிறந்த நடைமுறை மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதுடன், பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா சுகாதார நிபுணர்களின் வேலைவாய்ப்புக்கான நெறிமுறை மற்றும் நிலையான ஆட்சேர்ப்பு திட்டத்தை உருவாக்கும் என அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரை ஹனா சிங்கரை சந்தித்த, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், சிறிலங்காவிற்கான அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் பற்றி விவாதித்துள்ளார்.
நீதி மற்றும் நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு, காலநிலை முயற்சிகள் மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துதல் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறிலங்காவில் செயற்படும் பிரித்தானிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுநலவாய வணிக வங்கியுடன் ஒரு நுண்ணறிவு கலந்துரையாடலில் தான் பங்கேற்றதாக அமைச்சர் தாரிக் அஹமட் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார பாதிப்புகள் பிரித்தானியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, பிரிடிஷ் கவுன்சில் அதிகாரிகளையும் சந்தித்த அமைச்சர் தாரிக் அஹமட், சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மர நடுகை நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.