நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் பிரிசில்ல சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பதிவான மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
மழையுடனான காலநிலை
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படுகின்றது.

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 27,754 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வேலைத்தளங்கள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவி வருகின்றது.
டெங்கு அறிகுறிகள்
காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அதனை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுக வேண்டும்.
குறிப்பாக தாய்மார், குழந்தைகள், முதியோர் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |