ஒதியமலைப் படுகொலை அன்றோடு முடிந்துவிடவில்லை!
ஒதியமலை என்ற பெயரை புலிகளின் குரல் ஊடாக கேட்டபோது அச்சமும் திகலும் நெஞ்சில் பரவியது.
புலிகளின் குரலில் ஒதியமலைப் படுகொலை பற்றிய நாடகம் போர்க்காலத்தில் பிரசித்தமானது.
2009 யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஒதியமலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். வடக்கு கிழக்கு எங்கும் பயணம் மேற்கொண்ட நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒதியமலைப்படுகொலை நினைவு நாட்காலத்தில் அங்கு சென்றிருந்தபோது 1984. 12.02 ஆம் நாளுடன் ஒதியமலைப்படுகொலை முடிந்துவிடல்லை என்பதை மாத்திரம் உணர்ந்தேன்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
ஒதியமலையை அண்டிய பகுதிகள் கென்பாம், டெலஸ்பாம், சிலோன் தியோட்டர். அங்கு அல்மனியம், ஆனைவெடி செய்யும் கொம்பனிகள் இருந்தன.
1000 ஏக்கர் திட்டத்தின் ஊடாக 1960 களுக்கு முன்னர் அங்கு தமிழ் மக்கள் காணி பகிர்ந்தளித்து குடியேற்றப்பட்டார்கள். பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பூமி என்பது ஒதியமலை உள்ளிட்ட கிராமங்களைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும்.
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கிய அன்றைய நாட்களில் பதவியாவிலிருந்து மெல்ல மெல்ல குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இப்போது ஒதியமலையின் எல்லை கடந்து வந்துவிட்டது. 1976இல் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகள் அவை.
குருவேப்பங்குளம், முறிகுளம், மயிற்கொண்டான்குளம், லாம்பு தூக்கிக் குளம் என்று முழுக்க முழுக்க தமிழர்ப் பெயர்களால் அழைக்கப்பட்ட அந்த இடங்களில் எல்லாம் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இன்று அவையெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு சிங்களப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை பழைய காலக் குளங்கள் என்று ஒதியமலையின் முதியவர்கள் கூறுகிறார்கள்.
தனிக்கல்லுக்குளம்
சிலோன் தியட்டரில் பனையாமுறிப்பு குளம் உள்ளது. இப்போது அந்த இடமும் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. தனிக்கல்லுக் குளத்திற்கு கல்யாண புர என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள். செம்பிக் குளமும் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது.
சிங்களக் குடியேற்றம் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டு வருகிறது என்பதுதான் ஒதியமலை போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களின் அச்சமாகத் தென்பட்டது.
சிங்களவர்கள் நாளும் பொழுதும் மெல்ல மெல்ல ஒவ்வொரு வீட்டைக் கட்டி நிலத்தைப் பிடித்து வந்ததைப் பார்த்தேன். அந்தப் பகுதிக்குப் போயிருந்தபோது காடுகள் வெட்டி எரியூட்டப்பட்டிருப்பதையும் சில சிங்களக் குடும்பங்கள் கொட்டில்களை அமைத்துக் குடியேறிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த அவர்களின் காணிகளை வனத்துரைக்கு கையகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கையகப்படுத்தி அதிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளுவதே இந்த நடவடிக்கையின் திட்டம். தமிழ் மக்களின் வயல் நிலங்கள், பயன்தரு மரங்கள், வீடுகள், கிணறுகள் என்று அவர்கள் காலம் காலமாக அந்தப் பகுதியில் வாழ்ந்தமைக்கான தடயங்கள் பலவும் அங்குள்ளன.
ஈழப் போராட்டத்திற்குக் காரணம்
வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துச் செல்லும் இந்த சிங்களக் குடியேற்றங்கள் கொக்குத் தொடுவாய், கொக்கிளாய் வரை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் குடியேற்ற திட்ட நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ப்பட்டவை. தமிழர் தாயகத்தை அபகரிக்கும் பிரித்து அபகரிக்கும் திட்டத்துடன் அவை மேற்கொள்ளப்படுகின்றன.
வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் இன்று நேற்று அபகரிப்புக்கள் மேற்கொள்ளப்படபவில்லை. அன்றே தொடங்கப்பட்டன. ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களிலும் இதுவும் ஒன்று. அந்தக் காரணம் இன்னும் இன்னும் மோசமாக விரிவாக்கப்படுகிறது.
இனத்தை அழிப்பதற்கு நிலத்தை அபகரிக்க வேண்டும் நிலத்தை அபகரிக்க இனத்தை அழிக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாத திட்டம் சுதந்திர இலங்கையின் பின்னர் பேரினவாதக் கொள்கையாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அன்று வவுனியாவின் எல்லைப் பகுதிகளை சிங்களக் குடியேற்றத்தின் மூலம் கைப்பற்றிக் கொண்டு வந்த வேளையில்தான் ஒதியமலையை கைப்பற்ற ஓர் இனப்படுகொலையை சிங்கள இராணுவத்தினர் புரிந்தனர்.
ஒதியமலை மக்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் மறக்க முடியாத நிகழ்வு அது. வவுனியா எல்லைக் கிராமங்களை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுப்பியது ஒதியமலைப் படுகொலை.
ஒதியமலைப்படுகொலை
ஓர் இனப்படுகொலை மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அது ஏற்படுத்தும் வடு என்றைக்கும் ஆறாதது. அவ்வாறுதான் ஒதியமலைப்படுகொலையும் நிகழ்த்தப்பட்டது. அதன் வடு இன்றும் ஆறாமல் இருக்கிறது. இன்னமும் ஒதியமலையில் அந்தக் கதையை மறக்காதவர்களே வசிக்கின்றனர். அந்தப் படுகொலையின் பின்னர் பிறந்து வளர்ந்தவர்களும் அந்தப் படுகொலையின் கதையைக் கேட்டு ஆறாத வடுவோடு வாழ்கின்றனர்.
ஒதியமலைப்படுகொலை 02.12.1984ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 32 அப்பாவிப் பொதுமக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அந்த நிகழ்வை இக் கிராமத்தின் முதியவர் ஒருவர் விபரித்தார்.
அன்றைக்கு நேரம் 4 மணி. இராணுவ உடையில் சிலர் வந்தார்கள். நாங்கள் இயக்கம் கூட்டம் ஒன்று வாருங்கள் என்று ஊரின் ஆண்களை அழைத்தார்கள். அவர்கள் கஜபாகுபுரத்தில் இருந்து வந்தவர்கள் என்று மக்கள் அறியவில்லை.
சென்றவர்களை உடைகளை களைந்து கைகளைக் கட்டி வெட்டிக் கொன்றார்கள். ஒருவருடன் ஒருவரை கட்டிக் கொண்டார்கள். சிலரை இழுத்துக் கொண்டு சென்று ஊர் எல்லையில் வைத்து வெட்டிக் கொன்று விட்டுப் போனார்கள்.
32 பேர் படுகொலை
அம்பிட்ட ஆரையும் அவங்கள் விடேல்ல என்று கூறுகிறார் அந்த முதியவர். எங்கட அப்பாவையும் அவர்கள்தான் கொன்றார்கள் என்று ஆறாத வடுவோடு பேசுகிறார் இன்னொருவர்.
1984 ஆம் ஆண்டு ஒதியமலை மக்கள் முதன் முதலில் தங்கள் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தார்கள். 32பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட பின்னர் கிராமத்தைவிட்டு எல்லாச் சொத்துக்களையும் கைவிட்டு மக்கள் ஓடினார்கள். 91 இல் மீள்குடியேறிதோடு மீண்டும் 97 இல் இடம்பெயர்ந்தார்கள் ஜெயசிக்குறு யுத்தத்தை புலிகள் தோற்கடித்து ஓயாத அலை நடவடிக்கை மூலம் அப்பகுதிகளை மீட்ட பின்னர் 2002இல் மீள்குடியேறிய மக்கள் மீண்டும் 2007இல் இடம்பெயர்ந்து 2010இல் மீள்குடியேறியிருக்கிறார்கள்.
ஒதியமலைப்படுகொலை நடந்த அந்த இடத்திலேயே அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. ஜெயசிக்குறு யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியபோது படுகொலையில் செய்யப்பட்டவர்கள் நினைவாக 32 பேரின் படங்களும் வைத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
அதை தற்போது இராணுவத்தினர் அழித்துவிட்டனர். கொல்லப்பட்ட மக்களுக்காக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி அவர்களை நினைகூர்ந்து வரும் ஒதியமலை மக்கள் அவர்களுக்காக ஒரு நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.
மறக்க முடியாத வடு
ஒதியமலைப் படுகொலையின் பின்னரும் வாழ்ந்த பலர் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னர் இந்தக் கிராமத்திற்குத் திரும்பவில்லை. தங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத சூழலில் அந்தக் கிராமத்தில் எப்படி வாழ்வது என்று அஞ்சுகிறார்கள்.
ஒதியமலை வரலாற்றின் இரத்தக் கதையை மறக்க முடியவில்லை என்கிறார்கள். அன்றும் இன்றும் அந்த எல்லைப் பகுதியில் ஒரே நோக்கமுடைய நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன.
தங்கள் கிராமத்தை அபகரிக்க எதுவும் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுவதை அந்தக் கிராமத்தை சுற்றி நடக்கும் நடவடிக்கைகளினால்தான். எல்லா மக்களும் எங்கள் கிராமத்திற்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்போடு குறிப்பிடுகிறார் ஆசித்தம்பி.
ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைத்து அவர்களின் நினைவுதினத்தை கொண்டாட வேண்டும் என்றும் இந்த மக்கள் ஆசையோடு இருந்தனர். வீட்டுக்கு வீடு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனால் மறக்க முடியாத வடுவாக அந்தத் தினம் நிலைத்துவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |