கடலுார் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள வெங்காயம்
கடலுார் துறைமுகத்தில் (Cuddalore Port) இருந்து கடல் வழியாக எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இலங்கைக்கு, பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களில் கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்புத்தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதி இடம்பெற்றதாகவும் 2002க்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் பின்னர், சாகர் மாலா திட்டத்தில் இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயாராக உள்ள நிலையில் கடல் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் துறைமுகம்
இந்த நிலையில் குறித்த துறைமுகத்தை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, கடலுார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சீமெந்து, வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
குறிப்பாக, பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும், 10ஆம் திகதி வெங்காய ஏற்றுமதி ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சரக்கு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடலுார் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள், மிதவைகள் கையாள்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், சுங்கம், குடிவரவு குடியகல்வு, சுகாதாரத்துறை ஆகிய பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
