நெடுந்தூர பேருந்துப் பயணிகளுக்கு இணையவழி இருக்கை முன்பதிவு திட்டம் ஆரம்பம்
நாட்டில் நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இலகுவான முறையில் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்காக புதிய முன்னோடித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று (04.05.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் அன்றாடப் போக்குவரத்திற்கு தொடருந்துகளைக் காட்டிலும் பேருந்துகளே கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன.
இருக்கைகளை முன்பதிவு
இருப்பினும், பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால், பயணத் திட்டமிடல் கடினமாகி, பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த திட்டம், பயணிகள் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்யவும், தங்களது பயணங்களை மேலும் இலகுவாக திட்டமிடவும் உதவுவதோடு அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.
குறித்த திட்டம், ஆரம்பத்தில் தனியார் பேருந்து நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும், பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் வெற்றியைப் பொறுத்து, நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கியப் போக்குவரத்து மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
குறிப்பாக, மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையம், காலி மற்றும் கண்டி உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து நிலையங்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பயணிகள் www.busticket.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 0112001266 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ இருக்கைகளை முன்பதிவு செய்யலாம்.
இந்தச் சேவைக்குக் கூடுதலாகச் சுமார் ரூ. 30 கட்டணம் அறவிடப்படுவதோடு, வங்கி அட்டை மூலமாக கட்டண செலுத்தும் வசதியும் உள்ளது.
மேலும், ஊடக விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மூலம் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்