முத்தையன்கட்டு இளைஞன் படுகொலை : அரசாங்க தரப்பு வழங்கிய விளக்கம்
முல்லைத்தீவு (Mullaitivu) - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (17.08.2025) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒட்டுச்சுட்டான் - முத்தையன்கட்டு பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7 ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.
இராணுவ சிப்பாய்கள்
அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
குறித்த நபர்களை அங்கிருந்த தப்பியோடியபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் உடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் காவல்துறையினர் தயாரித்துள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்களுக்கு நேரடியாக பங்களிக்கவிலலை என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும் எச்சங்கள் உடற்கூறாய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ பேச்சாளரின் விளக்கம்
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார்.
முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாகவும்,இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை பேச்சாளரின் விளக்கம்
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எவ்.யூ.வுட்லர் விளக்கமளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான ஒட்டுச்சுட்டான் காவல்நிலையத்தினால் இரண்டு விசாரணைக்குழுகள் நியமிக்கப்பட்டுள்ளன.
13 இராணுவம் சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முகாமுக்குள் சந்தேகநபர்களை அனுமதித்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே இரு இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சிவிலியன்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேய மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் செய்யப்பட்டதாகவும், அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

