அடுத்த வாரம் கூடவுள்ள நாடாளுமன்றம் : வெளியான அறிவிப்பு
நாடாளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உண்ணாட்டரசிறை சட்டமூலம்
இதனையடுத்து 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், 11.00 மணி முதல் 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 20ஆம் திகதி காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.
அனுதாபப் பிரேரணை
21ஆம் திகதி 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |