யாழில் இ.போ.ச பேருந்தின் பிரேக் செயலிழப்பு- நூலிழையில் தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (05.02.2026) காலை பருத்தித்துறை நோக்கி 6 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்து நாகர்கோவில் பகுதியில் பிரேக் செயலிழந்ததால் பேருந்தை தொடர்ந்து இயக்க முடியாத சாரதி அவ்விடத்திலையே பேருந்தை நிறுத்தியுள்ளார்.
பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளதை தொடர்ந்து என்னால் பேருந்தை இயக்க முடியாதென இ.போ.ச சபையின் பருத்தித்துறை கிளைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு சாரதி நாகர்கோவிலில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், அரச அதிகாரிகள், ஏனைய தொழில் துறைகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இடை நடுவில் காணப்பட்டதுடன் பருத்தித்துறையில் இருந்து மற்றொரு பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் அரச பேருந்துகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால் உடனடியாக புதிய பேருந்தை தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை உரியவர்கள் செவி சாய்க்கவில்லை என்று மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
பழுதடைந்த அரச பேருந்துகளால் அவதிப்படும் வடமராட்சி கிழக்கு மக்களின் அவசர கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடன் தீர்த்துத்தருமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுப்பதுடன் அண்மையில் வடமராட்சி கிழக்கிற்கு கள ஆய்வு செய்த இ.போ.ச பிரதிநிதிகள் சிறப்பான சேவை இடம்பெறுவதாக கூறிய நிலையில் இன்று நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |