பாடசாலை மாணவியை கடத்த முயன்றவருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகில் மாணவி ஒருவரை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (8) அனுமதி வழங்கியது.
சந்தேக நபர் நேற்று (7) கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க முடிவு
குருந்துவத்த காவல்துறை சார்பாக முன்னிலையான காவல்துறை சார்ஜன்ட் திலகரத்ன, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து, இந்த சந்தேக நபர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று கூறினார்.
அதன்படி, சந்தேக நபரை மேலும் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
அனுமதி அளித்த நீதவான்
சந்தேக நபரை 72 மணி நேரம் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த சந்தேக நபர் கொழும்பின் புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியை கடத்தி, அச்சுறுத்தி, கப்பம் பெறும் நோக்கில் இந்தச் செயலை அவர் மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
