வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பாருங்கள் - அதுவே எங்களுக்கு பெரும் உதவி! இராஜாங்க அமைச்சர் பதில்
சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் கொவிட் தொற்று நோயை ஒழிப்பதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர் என ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைக்காது அவர்கள் தமது பணிகளை சுதந்திரமாக செய்ய சந்தர்ப்பத்தை வழங்குவது அரசியல்வாதிகள் வழங்கும் சிறந்த ஒத்துழைப்பாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் கமராக்களுக்கு முன்னால் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்க்குமாறு ராஜாங்க அமைச்சர் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் வாய்களை மூடிக்கொண்டு சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் செய்து வரும் வேலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதே தற்போது வழங்கக் கூடிய சிறந்த உதவி எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்புகளையும் வழங்க தயார் என எதிர்க்கட்சிகள் கடந்த தினங்களில் தொடர்ந்தும் கூறி வந்தன.
எனினும் எதிர்க்கட்சிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.