ஆபத்தான கட்டத்தில் போப் பிரான்சிஸ் உடல் நிலை
போப் பிரான்சிஸ் (Pope Francis) தற்போதும் ஆபத்து கட்டத்தில் தொடர்வதாக அவரது மருத்துவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் மேல் கடுமையான நிமோனியா பாதிப்புடன் கடந்த ஒருவார காலமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார்.
இந்தநிலையில், போப்பின் நிலை தொடர்பில் முதல்முறையாக தகவல் தெரிவித்துள்ள அவரது மருத்துவர்கள், இன்னும் ஒருவார காலம் போப் பிரான்சிஸ் மருத்துவ சிகிச்சையில் நீடிப்பார் என குறிப்பிட்டுள்ளனர்.
உடல் நிலை
மேலும், தமது உடல் நிலை தொடர்பில் ஒளிவு மறைவின்றி உலக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14 ஆம் திகதி முதல் ரோம் நகரில் அமைந்துள்ள Gemelli மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவரது நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், குறைந்தது அடுத்த வாரம் முழுவதும் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருப்பார் என்று அவரது மருத்துவர் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
ஆபத்தான நிலை
அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருவதாக குறிப்பிட்ட மருத்துவர், இந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் வாராந்திர பொது பிரார்த்தனையை பிரான்சிஸ் தலைமை தாங்குவாரா இல்லையா என்பது அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
போப் பிரான்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை ஆனால் இன்னும் அவர் ஆபத்து கட்டத்தில் இருந்து மீளவில்லை என்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவுக்கு குணமாகவில்லை என்றும் அவரது மருத்துவர் செர்ஜியோ அல்ஃபியரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி நேற்று தெரிவிக்கையில், போப் நன்றாக தூங்கி, ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி காலை உணவை உட்கொண்டார் என்றும், லேசான முன்னேற்றம் அவரது உடல் நிலையில் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புதன்கிழமை இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
