முடுக்கி விடப்படும் வழக்கு விசாரணை! யோஷித ராஜபக்சவுக்கு சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு முந்தைய அமர்வுக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி குறித்த அமர்வை அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன் விசாரணைக்கு வந்தது.
ஆவணங்கள்
அதன்போது, வழக்கு தொடர்பான பல ஆவணங்களை அரசு தரப்பு சட்டத்தரணி திறந்த நீதிமன்றத்தில் வழங்கியுள்ளார்.
மேலும், வழக்கு தொடர்பான வேறு சில ஆவணங்கள் கடுவெல நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருப்பதாக பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வழக்குத் தொடுப்பவர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, ஆவணங்களை ஆய்வு செய்ய வழக்கை அழைக்க திகதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
அதனடிப்படையில், இந்த வழக்கில் விசாரணைக்கு முந்தைய அமர்வுக்கு திகதி வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக நவம்பர் 6 ஆம் திகதி வழக்கை அழைக்க உத்தரவிட்டார்.
பின்னர், வழக்கின் முன் விசாரணை அமர்வுக்காக வழக்கை நவம்பர் 12 ஆம் திகதி அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது, கிட்டத்தட்ட 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி, சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
