சிறிலங்காவின் அதிபர் மன்னாருக்கு திடீர் விஜயம் - மக்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு (படங்கள்)
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே அதிபரின் இந்த விஜயத்தின் நோக்கம் என அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மன்னாரில் உள்ள ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக கலந்தாலோசித்துள்ளார்.
அத்துடன், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு சென்ற அவர் , கடற்றொழிலாளர்களுடன் உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு
நடுக்குடா கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் அதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து, அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் அவதானித்ததுடன், காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
இந்த நிகழ்வில், சிறிலங்காவின் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரென்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
