கால்நடைகளின் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாடு: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கால்நடை மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த பணி ஆணையை நடைமுறைப்படுத்துமாறு கால்நடை மருத்துவர்கள் குழு விவசாய அமைச்சரிடம் விடுத்த கோரிக்கையை பரிசீலிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், “பன்றிகள், செம்மறி ஆடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை பராமரிப்பதில், தொற்று நோய்களுக்கு மருந்துகள் கட்டாயம் பயன்படுத்தப்படுவதால், அந்த மருந்துகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது” என்றனர்.
பணிப்புரை
ஆகையால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலைக்கும் விற்கப்படும் விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறியும் வகையில் விலைகள் குறித்த உடனடி அறிக்கையை தமக்கு வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய அமைச்சுக்கு அதற்கான அதிகாரம் இல்லை எனவும் இறக்குமதி விலைக்கும் மருந்து விற்பனை விலைக்கும் இடையே உள்ள இடைவெளியை கண்டறிய வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.