விமான விபத்தில் உயிரிழந்தது வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினே - ரஷ்ய புலனாய்வாளர்கள் உறுதி
விமான விபத்தில் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் இறந்ததை ரஷ்யாவின் புலனாய்வுப் பிரிவு இன்று (27) உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை விமான விபத்தில் இறந்த 10 பேரின் அடையாளங்களை மரபணு சோதனைகளின் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் வாக்னர் கூலிப்படை குழுவின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடங்குவார் என்றும் ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
பிரிகோஜினின் இறப்பு

எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் மொஸ்கோவிலிருந்து சென்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கி பிரிகோஜின் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
திடீரென விமானம் தலை குப்புறப் பாய்ந்தது. 30 விநாடிகளில் அந்த விமானம் 8000 அடி கீழே விழுந்தது என்று விமானத்தை ட்ராக் செய்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெட் விமானத்தில் பயணம் செய்த 3 பணியாளர்கள், 7 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த 7 பயணிகளில் புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என தகவல் வெளியாகியது.
மேலும் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள, விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் பிரிகோஜினின் பெயர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.