பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கை- தனியார் பேருந்து சங்கம்
நிவாரணம் வழங்கப்படாவிட்டால், கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலையை இலங்கை கனியவள கூட்டுத்தாபனமும், அதிகரித்ததை அடுத்து பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
அதேவேளை, டீசல் மானியம் கிடைக்காவிட்டால், தமது சங்கத்தினால், பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்திருந்தார்.
தனியார் பேருந்து துறையை மீட்க டீசல் மானியம் அவசியமாகும். இதன்படி, 121 ரூபா என்ற பழைய விலைக்கு டீசலை வழங்குவதுடன், குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு 100 லீற்றர் டீசலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு 200 லீற்றர் டீசலும் வழங்கினால், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.
இல்லாவிட்டால், கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும். டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஆகக்குறைந்த கட்டணம் 25 முதல் 30 ரூபா வரையில் இருக்க வேண்டும். ஏனைய கட்டணங்கள், 30 சதவீதத்தில் அதிகரிக்க வேண்டும் எனவும் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.