ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
ரஷ்ய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யத் தயார் நிலையில் உள்ளனர். ஆனால், தெளிவான மற்றும் வணிக ரீதியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் இல்லாததும், சர்வதேச தடைகள் தொடர்பான கட்டுப்பாடுகளும் காரணமாக குறிப்பிடத்தக்க முதலீடுகள் இன்னும் செயற்படுத்த முடியாமல் உள்ளதாக ரஷ்ய தூதுவர் லெவன் ஜாகார்யன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரக அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில், ரஷ்ய தூதுவர் இதைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் ரஷ்யாவின் நேரடி முதலீடுகள் எதுவும் இல்லை என்றாலும், தனியார் துறையில் ஆர்வம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தடைகள்
“எனக்குத் தெரிந்த வரையில் எந்த முதலீடும் இல்லை. தனியார் துறையிலிருந்து வந்தால் அது அவர்களது தீர்மானம். நாங்கள் முதலீடு செய்யத் தயாராக உள்ளோம்; ஆனால் தெளிவான திட்டங்கள் இல்லை,” என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான சில யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவை நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேச தடைகள் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி அமைப்புகளில் சிக்கல்களை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் முதலீட்டு சூழல்
ரஷ்யா சீனா, வியட்நாம், ஈரான் போன்ற நாடுகளுடன் தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்வதாகவும், ஆனால் இலங்கையுடன் அத்தகைய ஏற்பாடுகளைச் செயல்படுத்துவது சாத்தியமாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவின் MIR கட்டண அட்டை முறையை இலங்கையில் அறிமுகப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளும் நாடுகள் இரண்டாம் நிலை தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கு அப்பாற்பட்ட வகையில், இலங்கையின் முதலீட்டு சூழலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு போதுமான ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |