யாழில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்
புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் (22.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம் (Jaffna), கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
புதிய இலவச நீரிணைப்புக்கள்
இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவில் காணப்படும் நீரிணைப்பிலிருந்து புதிதாக புதிய இணைப்புக்களை விஸ்தரிப்பதற்கும், தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கரவெட்டி, கோப்பாய் , சாவகச்சேரி, நல்லூா், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இலவச நீர் விநியோகம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 500 பயனாளிகள் தெரிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் (கரவெட்டி , கோப்பாய் , சாவகச்சேரி, நல்லூா், தெல்லிப்பழை, யாழ்பபாணம் பருத்தித்துறை மற்றும் வேலணை), தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் மற்றும் மீள்குடியேற்றப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
