இவ்வருட குற்றச்செயல்களில் முதலிடம் பிடித்த மாகாணம் மற்றும் காவல்துறைப் பிரிவுகள்; வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வருடம் குற்றச்செயல்களும் அதிகளவில் அதிகரித்துள்ளன.
அந்தவகையில், கடந்த வருடங்களை விட இவ்வருடம் நாட்டில் அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களின் மாகாண மற்றும் காவல்துறைப் பிரிவு வாரியான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில் குற்றச்செயல்கள்

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான ஆய்வினை பேராதனைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், குறித்த குற்றச் செயல்களில் மேல்மாகாணம் முதலிடத்தில் உள்ளதுடன், 37 வீதமான குற்றங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
இதேவேளை, வடமேற்கு மாகாணத்தில் 13 வீதமும், தென் மாகாணத்தில் 10 வீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 09 வீதமும் மற்றும் மத்திய மாகாணத்தில் 08 வீத குற்றங்களும் பதிவாகி உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்செயல்களின் வகைகளின் அடிப்படையில்

இந்தக் குற்றச்செயல்களில் சொத்துக்கள் தொடர்பில் 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிராக 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளதுடன், இவ்வருடம் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாகனத் திருட்டில் 39 வீதமானவை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் 14 சதவீதம் வடமேற்கு மாகாணத்திலும், 13 சதவீதம் தென் மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது.
காவல்துறைப் பிரிவு ரீதியில் குற்றச்செயல்கள்

இவ்வருடம் காவல்துறைப் பிரிவுகளில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களில் களனி காவல்துறைப்பிரிவிலே அதிகளவான குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், களனி காவல்துறைப்பிரிவில் 2,287 குற்றங்கள் பதிவாகியுள்ளது.
மேலும், அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட காவல்துறைப் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வழக்குகளின் அடிப்படையில்

இவ்வருடம் இடம்பெற்ற வழக்குகளில் 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகள் உடைப்பு மற்றும் 2,159 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021 மற்றும் 2020 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடமே அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.