மியன்மாரில் கனமழை - ஐவர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு
மியன்மாரில் பெய்து வரும் பருவமழையினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி மியன்மாரில் பெய்வது வழக்கமானதாக இருந்தாலும் இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் இந்நிலை மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மடங்களில் தஞ்சம்
யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை வழங்கியமையால் பலர் வெளியேறியுள்ள நிலையில், வெள்ளத்தின் அளவு அதிகரிக்க வீட்டில் இருந்த மக்களை மீட்புப்படையினர் பாதுகாப்பான இடங்களிற்கு மீட்டு அனுப்பியுள்ளனர்.
இரண்டு மாடிக் கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்குத் துறவிகள் உணவு அளித்து வருகிறார்கள்.
கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பாகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயதான முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.