ராஜபக்சர்களுக்கு பலத்த அடி!! அதிர்ச்சி கொடுத்த சகாக்கள்
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளதால் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் புதிதாக நிதி அமைச்சை பொறுப்பேற்ற அலி சப்ரி சற்றுமுன் பதவி விலகியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடிய போது கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை பங்காளிக் கட்சிகள் விலக்கிக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பான்மைக்கு தேவை. ராஜபக்ச அரசாங்கத்திற்கு பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்திற்கான ஆதரவை திரும்ப பெற்றுள்ளன. பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த 43 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.
ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணிக்கு வழங்கிய ஆதரவை பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் பலம் 102 உறுப்பினர்கள் ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் ராஜபக்ச அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது.
அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தபோதிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கே அதிக அதிகாரம் உள்ளதால் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மேலும் சில நாட்கள் ஆகலாம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அப்போது நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலேயே ராஜபக்ச அரசாங்கம் கவிழும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.