மனிதாபிமானி வேடந்தரித்துள்ள ராஜபக்சர்கள்! ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்திய கிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழினப்படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடந்தரித்து தமது உலகமகா நடிப்புத்திறன்களை வெளிப்படுத்திவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று (08) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளது.
பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது. தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக்கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது.
அவ்வாறு தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டும், வயது முதிர்வினாலும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத்தேடிவரும் எஞ்சியுள்ளபெற்றோரும், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏனைய உறவினர்களும் தமது தொடர்பேராட்டத்தின் பத்தாவது வருடத்தின் தொடக்கநாளில் பாரிய ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
வட்டுவாகல் பாலம்
அந்தவகையில் இறுதிக்கட்ட வட்டுவாகல் பாலத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து ஆரம்பித்து வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இறுதிக்கட்ட போரின்போது வட்டுவாகல் பகுதியில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்ததாகக்கூறப்படும் இடம்வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

வட்டுவாகல் பாலம் என்பது தமிழ் இனப்படுகொலையின் நினைவுச்சின்னமாகும். எனவேதான் அந்தப்பாலத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்ததுடன், தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடம்வரையில் மேற்கொண்டனர்.
குறிப்பாக கொளுத்தும் வெய்யிலிலும் வயது முதிர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பெருமளவானவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் பெண்கள், சிறார்களும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றனர். இத்தகைய அவலநிலைகளை தாங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த உறவுகள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |