பாரிய அழிவினை எதிர்நோக்க நேரிடும்!! எதிரணி எம்.பி எச்சரிக்கை
இலங்கை மக்களின் வாழ்க்கையினை காப்பாற்றுவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்தக் கோரிக்கையினை அவர் முன்வைத்திருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''நாட்டு மக்கள் மூன்று வேளை உணவு உண்பதற்கான வழிவகைகளைச் செய்யுமாறு அரச தலைவர் உள்ளிட்ட அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
மக்களின் நோய்களுக்குரிய மருந்து வகைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குங்கள். மருந்து இன்றி நோயாளிகள் வேதனையுடன் இறந்து போகவிட வேண்டாம். மருந்து இல்லாது மக்களின் வாழ்நாளைக் குறைத்துக் கொள்ள இடமளிக்க வேண்டாம். இது மிகப் பெரிய பாவம்.
ஆகவே அரச தலைவர் நாட்டின் முதல் பிரஜை என்ற வகையில் இதனை உரிய வகையில் கையாள வேண்டும். எது குறைந்தாலும் பரவாயில்லை. மக்களின் வாழ்க்கையினைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஒமிக்ரேன் திரிபு நாட்டுக்குள் வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், விமான நிலையத்தில் இறுக்கமான கட்டுப்பாடுகளை கையாள வேண்டும்.
இல்லையேல் பாரிய அழிவினை மக்களும் நாடும் அனுபவிக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.