13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் அதிபர் விசேட உரை - ஜி.எல்.பிரீஸ் கண்டனம்
13 ஆவது அரசியலமைப்பு திருத்த நடைமுறை விடயத்தில் நாடாளுமன்றத்திற்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று அறிந்தே அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாளை(9) நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றுகின்றார் என சுதந்திர மக்கள் காங்கிரஸ்சின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.
இதன் பின்புலத்தில் வேறு ஒரு நோக்கம் இருப்பதனாலேயே அதனை பிரபலப்படுத்தும் வகையில் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகள் உள்ளிட்ட நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை திசை திருப்பவே ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அர்த்தமற்ற செயற்பாடு

இதுகுறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“எமக்கு அறிந்த வகையில், காவல்துறை அதிகாரம் தவிர்த்த 13 ஆவது திருத்தத்திலுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு மற்றும் அனுமதியை பெறுவதே அதிபரின் அபிப்பிரயமாகும்.
இது எந்தவொரு அர்த்தமும் இல்லாத நடவடிக்கை என்றே நாம் பார்க்கின்றோம். கண்ணை மூடி மறைக்கும் நடவடிக்கை.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. 13 ஆவது திருத்தம் என்பது, அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.
ஆகவே நாட்டின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க முடியாது.
அரசியலமைப்பு திருத்தம் என்பது, நாட்டின் அதியுச்ச சட்ட ஏற்படாகும். அதில் மிகவும் முக்கியமான ஒன்றே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்வது முற்றுமுழுதாக பலனற்ற ஒன்று.
அரசியலமைப்பு திருத்தத்தில் இந்த விடயம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த மாட்டோம், அதனை மறந்துவிடுவோம் என நாடாளுமன்றத்திற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.
விவசாய பொருளாதார வீழ்ச்சி

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் கடமைப்பட்டுள்ளன.
இது முற்றுமுழுதாக மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு நடவடிக்கை. இதனை ஒரு தந்திரமாகவே நாம் பார்க்கின்றோம்.
வாழ்வதற்கும் சாவதற்கும் இடையில் காணப்படும் போராட்டமே நாட்டில் தற்போது காணப்படுகின்றது.
விவசாய பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது.
இதனை மூடிமறைத்து மக்களின் அவதானத்தை வேறு பக்கம் திருப்பவே 13 ஆவது திருத்தத்தை அதிபர் கையில் எடுத்துள்ளார்” என்றார்.