நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில்
கோட்டாபய தரப்பின் நிபந்தனைக்கு ரணில் இணக்கம்
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டு முழுமையடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பில் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பொஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதான கோரிக்கை
ரணில் விக்ரமசிங்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தற்போதைய நாடாளுமன்றத்தை பதவிக்காலம் முடியும் முன்னர் கலைக்கக்கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளில் பிரதான நிபந்தனையாக இருந்துள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளது.
எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமைய தேவையானால், நாடாளுமன்றத்தை இரண்டரை ஆண்டுகளின் பின்னர் எந்த நேரத்திலும் கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
