தமிழர் உள்ளடங்களாக உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்கும் ரணில்!
பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை அமைக்கவுள்ளார்.
முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் அமையப்பெறவுள்ள இந்த குழு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது குறித்து, பிரதமருக்கு ஆலோசனை வழங்கவுள்ளது.
இந்தக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் திறன் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சாந்த டேனியல் ஆகியோர் அடங்குகின்றனர்.
நந்தலால் வீரசிங்க
தமிழர் ஒருவரை கொண்ட குழு
குறித்த குழுவின் அங்கத்துவரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஓர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் தனியார் துறையைச் சேர்ந்த மேலும் மூன்று உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, ரணில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் ஆகிய அமைச்சுக்களின் பொறுப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திரஜித் குமாரசுவாமி
இதேவேளை, மீளவும் மத்திய வங்கியின் ஆளுநராகவோ அல்லது மத்திய வங்கியினுள் செயற்படவோ விரும்பவில்லை என இந்திரஜித் குமாரசுவாமி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.