நாட்டை ஆட்சி செய்வது ரணிலா - ராஜபக்சர்களா..! அதிகரிக்கும் அடக்குமுறைகள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
உண்மையில் தற்போது நாட்டை ஆட்சி செய்வது ரணில் விக்ரமசிங்கவா அல்லது ராஜபக்சர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(5)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரைக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் ராஜபக்சர்களின் கட்டளைகளையே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டால் வரி சலுகையைப் பாதிக்கும் எனக் கூறியவர், இன்று அது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமை மீறல்கள்
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை இழப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றதா? சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்டவை வெறுமனே எமக்கு உதவ முன்வரப் போவதில்லை.
நாட்டில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் மதிக்கப்பட பாதுகாப்பட வேண்டும். மனித உரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து , சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்க முடியாது.
உண்மையில் தற்போது அரசாங்கத்தை நிர்வகிப்பது யார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாமல் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் ஜனநாயகமானதாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
அடக்குமுறைகள் ஊடாக மக்களை முடக்கும் சர்வாதிகார ஆட்சி
கொள்கை பிரகடன உரையில் தெரிவித்த விடயங்களை நாடாளுமன்றத்தின் 4 சுவர்களுக்குள் மாத்திரம் வரையறுக்காமல் , அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு அடக்குமுறைகள் ஊடாக மக்களை முடக்கும் சர்வாதிகார ஆட்சியையும் அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.