விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது தொடர்பில் மீள்பரிசீலனை
அரசாங்கத்தில் பணியாற்றும் விஷேட வைத்தியர்களின் ஒய்வு பெறும் வயதினை 63 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி 60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களுக்கு ஓய்வு வழங்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி 176 விசேட வைத்தியர்கள் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று (27) பரிசீலிக்கப்பட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
மீள்பரிசீலினை
இதன்போது விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி, சஞ்சீவ ஜயவர்தன, சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எனினும் சில விசேட வைத்தியர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த மனுவை இன்றைய தினமும் (28) பரிசீலிக்குமாறு அதிபர் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த மனுவை இன்றைய தினமும் பரிசீலிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.