சட்டத்தை மீறிய ரிசாட் - த.ம.வி.புலிகள் கட்சி கடும் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனது வீட்டில் இடம்பெற்ற சிறுமியின் கொலைக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் மகளீர் அமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் இக்கண்டனம் வெளியிடப்பட்டது.
இவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் தீ எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணையினை வலியுறுத்தியதுடன், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வேலை, தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், இசாலினிக்கு நீதிவேண்டும், ஒரு அமைச்சராக இருந்தவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியது சட்ட மீறலாகும்.
இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரளை பற்று தவிசாளர் சோபா ரஞ்சித் தெரிவித்தார்.
வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்கள், தலவாக்கலை டயகம 3ஆம் பிரிவைச் சேர்ந்த சிறுமியின் மரணம், இலங்கைக்கு அதிர்ச்சியை தரும் செய்தியாகும்.
இலங்கையில் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் ஒரு சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியிருப்பது குற்றமாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் எம்.கிறிஸ்டினா தெரிவித்தார்.
சிறுமியின் கொலைக்கு எதிரான கண்டன அறிக்கை வெளியிடும் இந்த ஊடக சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.