ஆங்கிலக் கால்வாயில் பரபரப்பு: பிரித்தானிய படகு மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு
ஆங்கிலக் கால்வாய் (English Channel) கடல் பகுதியில் பயணித்த சொகுசுப் படகு (Yacht) ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு குறித்து பிரித்தானிய இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆங்கிலக் கால்வாய் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்த அறிக்கைகள் தொடர்பாகத் தாங்கள் விசாரித்து வருவதாகப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று, பிரித்தானிய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்கு வெளியே ஐல் ஆஃப் வைட் (Isle of Wight) தீவிற்குத் தெற்கே சுமார் 20 மைல் (32 கிலோமீட்டர்) தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போது ரஷ்ய கடற்படைக் கப்பல் ஒன்றினால் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொருளாதாரத் தடை
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் படகுக்கும் எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த சமயத்தில் பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.எஸ் மெர்சி (HMS Mersey) என்ற கப்பல் அந்த ரஷ்ய போர்க்கப்பலைக் கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நிழல் கடற்படையின் (Shadow fleet) ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் (Tanker) ஒன்றை ஆயுதம் ஏந்திய பிரித்தானியப் படையினர் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அதிரடியாக அண்மையில் சிறைபிடித்திருந்தனர்.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களிலேயே தற்போதைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |