கிரிக்கெட் சபையிலிருந்து பெறுமதிமிக்க பரிசுகள்...! தேசபந்து மீது குவியும் குற்றச்சாட்டுக்கள்
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) அரச பதவியை வகித்துக் கொண்டு கிரிக்கெட் சபையிடமிருந்து நிதி மற்றும் பெறுமதிமிக்க பரிசுகளைப் பெற்றமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரிடம் வலியுறுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பி. ஹேசா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20.03.2025) வியாழக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை
அவர் மேலும் உரையாற்றுகையில், ‘‘விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது நான் ஆற்றிய உரையை ஊடகங்கள் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அங்குள்ள அதிகாரிகள் மீதும் நான் வைராக்கியத்துடன் பேசவில்லை. குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு கிரிக்கெட் சபையை வினைத்திறனாக்குவதற்காகவே முயற்சிக்கிறோம்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு இலங்கை கிரிக்கெட் சபை கொடுப்பனவு மற்றும் பரிசுகளை வழங்கியது என்று குறிப்பிட்டிருந்தேன்.
தேசபந்துக்கு எவ்விதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்று கிரிக்கெட் சபை புதன்கிழமை அறிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம். பல அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.
தேசபந்து தென்னக்கோனுக்கு எவ்விதக் கொடுப்பனவும் வழங்கவில்லை என்று கிரிக்கெட் சபை தற்போது கூறுகின்றது. கிரிக்கெட் சபையின் தற்போதைய உப தலைவர் தலைமையில் 2023.07.31ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கிரிக்கெட் சபையில் நிர்வாகக்குழு கூட்டத்தின்போது தேசபந்து தென்னக்கோனுக்கு கொடுப்பனவு, 200 லீற்றர் எரிபொருள், தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
கிரிக்கெட் சபையின் உறுப்பினர் தெரிவுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாக்குத்தெரிவில் பங்குபற்றுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த அரசாங்கத்தில் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தை நாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்வோம்.
கிரிக்கெட் சபை சிறந்த தீர்மானங்களை எடுக்குமாயின், அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். சம்மி சில்வாவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சபை தூய்மையானதென இந்தச் சபையில் பேசிய பலர் இன்று மக்களினால் புறக்கணிக்கப்பட்டு வீடுகளில் உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பி. ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்