சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன் - கறாராக பதிலளித்த சரத் வீரசேகர
முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியதன் மூலம் தொல்லியல் திணைக்களத்தின் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக சரத் வீரசேகர குற்றம் சாட்டியிருந்தார்.
அதேவேளை, நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் கூறியிருந்தார்.
கண்டனப் போராட்டம்

இந்த நிலையில், சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து நீதிமன்றங்கள் முன்பாக அடையாளக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அவர்கள், "சரத் வீரசேகர நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியம் இருந்தால் வெளியில் வந்து கதைக்க வேண்டும்" - என்று சவால் விடுத்திருந்தனர்.
சட்டத்தரணிகள் சவால்

இந்தச் சவால் தொடர்பாகச் சரத் வீரசேகரவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்திருந்த கருத்துக்குத்தான் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் சவால் விடுத்துள்ளனர்.
எனவே, அவர்களின் சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன்" - என்றும் குறிப்பிட்டார்.