அம்பலமான பெரும் மோசடி! துபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பெண்
பின்லாந்தில் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர், துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் மூலம் குறித்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தப் பெண் காலியின் மாகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் சகோதரர்
இதேவேளை, இந்த பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திஸ்ஸர நாணயக்கார மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பின்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 48 நபர்களிடமிருந்து 87 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திஸ்ஸர நாணயக்கார கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் திகதி கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |