ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம் : தடைவிதிக்குமாறு பொங்கியெழும் வைகோ மற்றும் சீமான்
ஈழத் தமிழர்களை மிக மோசமாக சித்தரிக்கும் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோமற்றும் சீமான் இருவரும் தெரிவித்துள்ளனர்.
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "கிங்டம்" (kingdom). இப்படம் கடந்த ஜூலை 31ஆம் திகதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம்
இந்நிலையில் கிங்டம் திரைப்படம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களை அடிமைகள் போலவும், தீண்டத் தகாதவர்களை நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஈழத் தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்
தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டத்தையும், 30 ஆண்டு காலம் பிரபாகரன் தலைமையில் மறப்போராட்டத்தையும் நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இனவெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் கொடியவன் ராஜபக்சே உள்ளிட்ட கும்பலை நிறுத்தி தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்ட அறிக்கை
இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், “கிங்டம் திரைப்படம் ஈழ சொந்தங்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறான சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை தவறாக சித்தரிக்கலாம் என நினைப்பதை அனுமதிக்க முடியாது. வரலாற்றில் நடந்திராத ஒன்றை நடத்ததாக காட்டி, ஈழ மக்களை மிக மோசமாக சித்தரிக்கும் இப்போக்கு கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.
திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம்
ராமநாதபுரத்தில் ’கிங்டம்’ படத்தை திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறைக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதேபோல் கோயம்புத்தூரில் கிங்டம் படம் திரையிடப்பட்ட திரையரங்கை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
