கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், அவர் வசித்த வீட்டில் இருந்த சிசிரிவி (CCTV) கமராக்களில் எவ்விதப் பதிவுகளும் சேமிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மரணம் குறித்த இரண்டாவது நாள் விசாரணையின் போது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்தத் தகவலைச் சமர்ப்பித்துள்ளனர்.
கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த வீட்டில் சிசிரிவி கமரா கட்டமைப்பு செயற்பாட்டில் இருந்த போதிலும், அதில் காட்சிகள் எவையும் சேமிக்கப்படும் வகையில் அமைப்பு (Storage) இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றுமொரு வீட்டின் சிசிரிவி
இதன் காரணமாக, அந்த வீட்டிலிருந்து விசாரணைகளுக்குத் தேவையான நேரடி காணொளி ஆதாரங்கள் எதனையும் காவல்துறையினரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மர்மத்தை விலக்குவதற்காக மே 6 ஆம் திகதி முதல் மே 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அந்த வீட்டின் அருகில் உள்ள மற்றுமொரு வீட்டின் சிசிடிவி காட்சிகளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்தப் பதிவுகளில் வீட்டின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் தெளிவாகத் தெரிவதாகவும், அவற்றின் மூலம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.
பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |